செப் 3-ல் சௌந்தர்யா திருமணம்… சென்னையில் குவியும் விஐபிகள்!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா – அஸ்வின் குமார் திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி – தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கவிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சௌந்தர்யாவுக்கும் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3-ந்தேதி திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எந்திரன் படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்ட ரஜினி, திருமண வேலைகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். மிகப் பிரமாண்டமாக இந்தத் திருமணம் நடக்கிறது.
எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மற்றும் ராஜா முத்தையா மண்டபங்கள் திருமணத்துக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருமணத்துக்கு யார் யாரை அழைப்பது என்ற பட்டியலை தயார் செய்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, பாஜக தலைவர் எல்கே அத்வானி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை அழைக்கிறார் ரஜினி.
தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் அழைப்பிதழ் தரப்பட உள்ளது. சௌந்தர்யா திருமண நிச்சயதார்த்தத்துக்கு ஜெயலலிதா வரவில்லை. எனவே திருமணத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினிக்கு நெருக்கமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே திருமணத்துக்கு வருகிறார். மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போன்றோரும் திருமணத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகினரும் பெருமளவில் வருகிறார்கள்.
திருமண அழைப்பிதழை சௌந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தேர்வு செய்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கு ரஜினியுடன் சென்று அவர்களே நேரடியாக கொடுக்கின்றனர்.
சௌந்தர்யா தற்போது சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார். மெகாபட் ஜெட்டில் தயாராகிறது. பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
Blogger இயக்குவது.