12 ராசிகளுக்கும் உரிய "விகிர்த்தி" புது வருட இராசிபலன்கள். - கணித்தவர்-பேராசிரியர் ஸ்ரீதரன், மதுரை (சற்று விரிவாக)


மேஷராசி அன்பர்களே!
விருக்தி ஆண்டின் முக்கியமான பகுதிகளில் ராசிநாதன் நீச்சபங்கம் பெற்றும், சுக்ரன் குருபார்வையிலும் கூடுதலான நாட்கள் சஞ்சரிப்பதாலும் தொழில் துறை, வியாபாரம், உத்யோகத்துறைகளில் பிரச்சினைகளைக் கடந்து முன்னேற்றமான, ஆக்கப்பூர்வமான செலவுகளோடு மனதிற்கு உற்சாகமான நிலை, உடல் நலனில் தெளிவான நிலை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் நிலை உண்டு. உத்யோகத்தில் உயர்வு தொடர்பான பயிற்சிகள், புதிய கல்வி உண்டு. புதிய வியாபார உறவுகள் ஜுன் மாதம் முதல் உண்டு. தொழிலில் போட்டியாளரை சுலபமாக சந்திக்கும் நிலையும், திருமணம், சுற்றுலாச்செலவுகளும் உண்டு.



ரிஷப ராசி அன்பர்களே!
குருவின் பாதகநிலை ராகு, கேதுவின் அசுப நிலைக்கடுமை ஆண்டின் தொடக்கத்தில் தொழிலில் உத்யோகத்தில் எதிர்மறைப் பலன்களை ஏற்படுத்தும்.கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.வியாபார உறவுகளில் எச்சரிக்கையும், முன்யோசனையும் இருத்தல் நல்லது. பண விஷயங்களில் குறிப்பாக, பயணம் மேற்கொள்ளும் போது கவனம் வேண்டும். உறவு வகையில் அசுப செலவீனங்கள் வரலாம். பழைய கால பொருள் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. விருந்துகள், வெளி உணவுகளில எச்சரிக்கை,கட்டுப்பாடு தேவை. வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். எந்த விடயத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கிறது.



மிதுன ராசி அன்பர்களே!
ராசிநாதன் புதன் வக்ரம், நீசம், அஸ்த மனம் என்ற நிலையிலும், ஒரு ராசியில் 30 நாட்கள் இல்லாத சூழ்நிலை ஆண்டின் பெரும்பகுதியும் இருப்பதால் தொழிலில் பதட்டமான சூழ்நிலை நிலவும். உத்யோகத்தில் கவனக்குறைவால் பிரச்சினைகள் வரலாம். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை நிதானமாக சிந்தித்து செயல்படுத்துவது நல்லது.வியாபார உறவுகளில் நம்பிக்கை மோசடி, வாக்கு தவறுதல் போன்ற சூழல் ஏற்படலாம். இக்கட்டான சூழ்நிலையில் நட்பு உறவுகளில் உதவி பெற முடியாத நிலை கூட ஏற்படலாம். தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு ஆட்கொள்ளும். உறவு வழி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தவறுதல் போன்ற சங்கடமான நிலை உருவாகலாம். எந்த வேலையிலும் காலதாமதம், வேலையில் முழுமை இல்லாமல் போவது போன்ற நிலை தொடரும். எனவே, நிதானம் அதிகம் தேவைப்படும். தியானத்தை கடைபிடித்து, குல தெய்வத்தை வேண்டி வேலைகளை மேற்கொண்டால் பாதிப்புகள் குறையும்.



கடக ராசி அன்பர்களே!
ராசிநாதன் சந்திரன், இந்த ஆண்டின் பெரும்பகுதியும் பாதகமான கிரகங்களுடன் தொடர்பு கொள்கிறான். இதனால் ஏழரைச்சனியில் இருந்த தாக்கம் இருப்பது போன்ற நிலை தொழிலில், உத்யோகத்தில், வியாபாரத்தில் தொடரும். கொள்கை அளவில் திடமான முடிவு எடுப்பீர்கள். ஆனால் செயல் அளவில் இறங்கும் போது பலவீனமான முன்னேற்றம் தான் இருக்கும். மேற்கொள்ளும் பயணங்கள் வீண் அலைச்சலாக மாறி, சலிப்பை ஏற்படுத்தும். வீண்செலவுகள் தவிர்க்க முடியாதது. தொழிலில்,வியாபாரத்தில் வீண் நஷ்டங்கள் உருவாகலாம். இருந்தும் இல்லாத நிலை என்பார்களே அப்படி ஒரு நிலையில் இருப்பீர்கள். இருந்தும் தியானமும், மனக்கட்டுப்பாடும் உங்கள் பிரச்சனைக்கு மருந்தாக அமையும்.



சிம்ம ராசி அன்பர்களே!
ஏழரைச்சனியின் கடுமை குறைந்து வரும் போதே குருவின் சுபத்தன்மையும் குறைகிறது. இதனால் எதிர்பார்த்திருந்த சிலதுறைகளில ஏமாற்றத்தை தரும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம், உத்யோகத்தில் சலனம், சஞ்சலம் உண்டு. முயற்சிகளில் சுணககத்தன்மை ஏற்படுத்துவதால் அடுத்து வேறு ஒன்றில் ஈடுபடும போது தயக்கமும்,தாழ்வு மனப்பான்மையும் தோன்றும். சுபச்செலவு, அசுபச் செலவாக கலந்த நிலை காணப்படும். உத்யோகத்தில் உயர்வு தாமதப்படும். பயணங்கள் அதிகமாக இருக்கும், ஆனால் ஆதாயம் குறைவாக இருக்கும். தொழிலில் மற்றவருக்காக அதிகம் உழைக்கும் நிலை இருக்கும். குரு வழிபாடு தாமதம், தடங்கலை தவிர்க்கும்.



கன்னி ராசி அன்பர்களே!
ராசிநாதன் புதன் விருக்தி ஆண்டில் சீரான சஞ்சாரத்தில் காணப்படவில்லை. நான்கு மூலைகளிலும் பாதக கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் தொழில், உத்யோகம், வியாபாரத்தில் இக்கட்டான சூழ்நிலை இருந்து வரும். ஒரு பக்கம் முயற்சி செய்தால் மற்ற பக்கம் இன்னொரு பிரச்சனை கிளம்பும். பொருள் செலவு, மனக்கவலை உண்டு. நட்பு விடயத்தில் எச்சரிக்கை தேவை. கமிஷன் ஏஜென்சி துறைகளில் நமபிக்கை இழப்பு உண்டு. புததகம் வியாபாரத் துறைகளில் லாபம் குறையும். தாயின் உடல் நலனில் பாதிப்பு இருக்கும். மனைவி வழியில் சுபச்செய்தி, சுபச்செலவும் உண்டு.



துலாம் ராசி அன்பர்களே!

ஏழரைச்சனியின் தொடக்கம் என்றாலும் குரு மறைவு பெற்றாலும், எதிர்மறைகள் சாதகமாவது போல் தொழிலில், உத்யோகத்தில் எதிர்பாராத வரவும், உயர்வும் வரும். மதிப்பு உயரும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. புனிதப்பயணங்கள் உள்பட சுபச்செலவுகள் உண்டு. கடன் தீரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் கூடுதலான லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக முடிவுக்கு வராத பிரச்சனை தீரும் நிலை உருவாகும். புதிய நடபு வட்டாரங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களால் புதிய இடங்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்பு வரும். கவலைகள் இல்லாத நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிம்மதியான மனிதனாக உணர்வீர்கள்.



விருச்சிக ராசி அன்பர்களே!
ராசியில் செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றாலும், சனியுடன் சேர்ந்தும், பார்த்தும் ஆண்டின் பெரும்பகுதியில் சஞ்சரிப்பதால் ராகு கேதுவினால் தொழிலில் முயற்சிகளில் தடங்கல், வியாபாரத்தில சில சிக்கல்கள், பணவரவில் தடை, தாமதத்தை ஏற்படுத்தும்.தொழிலில் கடுமையான போட்டிகளை சந்திக்க நேரிடலாம்.நட்புகளில சில கருத்து வேறுபாடுகள் வரலாம். சொத்து விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. குழந்தைகளின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு சிக்கல்களை குறைக்கும்.



தனுசு ராசி அன்பர்களே!
ஆண்டு முழுவதும் குருவின் சஞ்சாரம் திருப்திகரமாக இல்லாத காரணத்தாலும், பாவ கிரகங்களின் சூழலில் இருப்பதாலும் தொழிலில், உத்யோகத்தில் பற்றற்ற நிலை காணப்படும். சலிப்புத்தன்மை, விரக்தி, வெறுப்பும் தோன்றும். ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். தேவையற்ற செலவுகள் உண்டு. உறவு வழிச் சுப செலவும் உண்டு. குழந்தைகளின் கல்வி செலவு கூடுதலாகும். பொறியியல் துறை தொடர்புடையவர்கள் புதிய கல்வி, பயிற்சி பெற்று கூடுதலான தகுதியை ஏற்படுத்திக் கொள்வார்கள். தொழிலில் மந்த நிலை காணப்படும் போக்கால், வியாபாரம், உத்யோகத்தில் தாமத செயல்பாடுகள் காணப்படலாம. கவனத்துடன் செயல்பட மனதை ஒருமுகப்படுத்தி பணிகளை செய்யுங்கள். நினைத்த தெய்வத்தை மனமுருக தியானித்து செயல்படுங்கள்.



மகர ராசி அன்பர்களே!
ராசிநாதன் சனி, செவ்வாய் மற்றும் குருவின் தொடர்பால் நன்மையும் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில், உத்யோகம், வியாபாரத்தில் நிதானமான நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். பணவரவும், சேமிப்பும் இருக்கும். குலதெய்வ தரிசனம் உண்டு. ஆலயப்பயணங்கள் உண்டு. போட்டிகளே இல்லாத நிலை வியாபாரத்தில், தொழிலில், உத்யோகத்தில் உண்டு. உத்யோகத்தில் தலைமைப்பதவிகள் சுலபமாக கிடைக்கும். நன்கொடை மற்றும் கோயில் திருப்பணி, சமுதாயத் தொண்டு என்று பணச்செலவு உண்டு. திருமணம் தாமதம் ஆகும். புதிய நண்பர்கள், எதிர்பாராதவர்களின் சந்திப்புகள் ஆதாயம் தரும். நினைத்ததை சாதிக்கும் மன நிலை உண்டு.



கும்பராசி அன்பர்களே!
ராசிநாதன் சனியின் அட்டாமச்சனி நிலை காரணமாக தானே தனக்கு இடையூறாக இருப்பது என்ற நிலை இருக்கும். தர்மசங்கடமான நிலையை உணர்வீர்கள். தான் எடுத்த கல்விப்பிரிவு, வேலை, நிறுவனம் மீது சலிப்பு வரும். எடுக்கும் முடிவுகள் தவறானதாக தோன்றுவதால் மனதில் குழப்பம் வந்து நீங்கும். நட்பில் சிறு விரிசல் வரலாம். மருத்துவ செலவுகள் இருக்கும். பண உதவிக்கு மற்றவர்களை நம்பும் நிலை உருவாகலாம். எனவே, எதை செய்தாலும் பல முறை சீர் தூக்கி பார்த்து செய்வது நல்லது. மேலும் குழப்பங்கள் நீங்க தியானம உதவி செய்யும். மனதை அமைதிப்படுத்தும் முயற்சிகளை, பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.



மீனராசி அன்பர்களே!
ராசி நாதன் குரு ஆட்சி பெற்றாலும் சனி செவ்வாயின் பார்வையானது, ராகு கேது கேந்திர அமைப்பில் முன்னேறிய நிலையிலும் சில தடங்கல்களை சந்திக்க நேரலாம். தொழிலில் சிறிய அதிருப்தி இருக்கும். பதவி உயர்வு தடைப்பட நேரிடலாம். தன்னை விட தகுதி குறைந்தவர் பதவி உயர்வு பெறுவதை கண்டு வெறுப்படையும் சூழல் இருக்கும். தகுதி குறைந்த தலைமையிடம் பணி புரிய வேண்டிய நிலை ஏற்படலாம். ஆடம்பர கொண்டாட்டங்களில பங்கு பெறுவீர்கள். இதனால் தேவையற்ற பணவிரையம் உண்டு. தேவையற்ற அலைச்சல், பயணங்கள் உருவாகலாம. எங்கும் போகும் முன் இது சரியானதாகுமா என்று கணக்கிட்டு பின் கிளம்புங்கள். தெய்வ சிந்தனை அனுகூலங்களை ஏற்படுத்தும்.

கணித்தவர்-பேராசிரியர் ஸ்ரீதரன், மதுரை


Blogger இயக்குவது.