உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா


நுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா இன்று (07.02.2020) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதன்போது உழங்கு வானூர்தி மூலம் மலர்கள் தூவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை இந்தியா மாமல்லபுரம் சிற்பி அசோக்குமார் குழுவினரால் மிக நேர்த்தியான முறையில் அமையப்பெற்று தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகிலேயே மூன்றாவது உயரமான திருவுருவச்சிலை மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


இராகலை நகரின் நடுநாயகனாக 60அடி உயரமான முருகன் சிலையுடன், 75அடி உயரமான கம்பீர இராஜ கோபுரத்துடனும் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம், இன்று(7) காலை இனிதே நடைபெற்றது.


இராகலை நடுக்கணக்கு கங்கையிலிருந்து, யானை மேல் புனித கும்பநீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதன்போது விசேட வானூர்தி மூலமாக கோவிலின் மீது மலர் தூவப்பட்டு வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக வேத பாராயணங்கள் ஓதப்பட்டு பிரதான கும்பத்து நீர் ஏந்தி செல்லப்பட்டு கோவிலின் மூலமூர்திகள், பரிவார மூர்த்திகள் உட்பட பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து சிறப்பு பூசைகளுடன் தெய்வங்களுக்கு கண் திறப்பு நடத்தப்பட்டு, நடைதிறப்புடன் விசேட பூசைகள் இடம்பெற்று, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.


கும்பாபிஷேகத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.





Blogger இயக்குவது.