இன்று முதல் காஷ்மீரில் மாற்றங்கள்


இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.





இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் ஜம்மு காஷ்மீருக்கு ``சிறப்பு அந்தஸ்து'' வழங்க அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் வகை செய்தன.





கடந்த 65 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகுதியளவு தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்தது. நிர்வாகம், நிதி மற்றும் சட்டப்பேரவை அமைப்புகளில் அந்த மாநிலத்துக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. ``மாநிலத்தைச் சாராதவர்கள்'' - அதாவது ஜம்மு காஷ்மீரில் மூதாதையர் இல்லாதவர்கள், அங்கு சொத்துகள் வாங்குவதைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் அமலில் இருந்தன.





அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு வாகனங்களில் இந்திய தேசியக் கொடியுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியும் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.





இதுபோன்ற அரசியல் சாசன உரிமைகள் அளிக்கப்பட்டது, இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவால் செய்யப்பட்ட ``வரலாற்றுப் பிழை'' என்று மோதி அரசு நம்புகிறது.





சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்க்கும் பகுதியாக ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் தடுக்கும் அம்சங்களாக இவை இருக்கின்றன. அத்துடன் பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கவும், அங்குள்ள சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுக போர் நடத்தும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் இந்த உரிமைகள் அமைந்துள்ளன என மோதி அரசு கருதுகிறது.





ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த சிறப்புப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த மாநிலம் இப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்புக் கொடியும் இறக்கப்படுகிறது. இமயமலைப் பகுதி மாநிலம் என்ற அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.





ஆனால், ஜம்மு காஷ்மீரின் நீண்டகால பிரச்சினைக்கு இந்த இமாலய முடிவு தீர்வு காண உதவுமா என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.





கடந்த காலத்தில் சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்றாலும், எந்த மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை.





பிகாரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் பிரிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா உருவாக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளை அடுத்து இந்த எல்லை மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. அந்த மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல்களுடன் இவை அனைத்தும் நிகழ்ந்தன.





``மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் எதுவும் இல்லாமல், மாநில அந்தஸ்தை மத்திய அரசே பறிக்கும் முதலாவது மாநிலம் ஜம்மு காஷ்மீர்தான். அதிக மக்கள் தொகை இல்லாத லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக, புதுவையைப் போல இருக்கும். இந்த மாற்றத்தின் அம்சங்கள் அந்த மக்களுக்கு இன்னும் முழுமையாகப் புரிய வைக்கப்படவில்லை'' என்று ஸ்ரீநகர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், அரசியல்சட்ட நிபுணருமான ரியாஸ் காவர் கூறுகிறார்.





மாநிலத்தில் அமலில் இருந்த 420 சட்டங்களில், 136 சட்டங்கள் மட்டுமே புதிய ஏற்பாட்டின் கீழ் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ``எல்லா இடங்களிலும் ஒரே சட்டம் தான். இங்கே நல்ல சட்டங்கள் இருந்தன. உதாரணமாக வக்ஃபு சட்டம். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் வருவாயை மத குருமாருக்கு அளிப்பதை அனுமதிக்காது. ஆனால் மத்திய வக்ஃபு சட்டம் வேறுபட்டது. அதில், மத குருவுக்கு உரிமை உண்டு என்று அதில் உள்ளது'' என்கிறார் காவர்.





மாற்றத்தின் விவரங்கள் குழப்பமானவையாக இருப்பதால் மக்கள் கருத்தை அறிய முடியவில்லை என்று கல்லூரி மாணவரும், வளரும் எழுத்தாளருமான குராத் ரெஹ்பர் கூறுகிறார்.





``அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முந்தைய நிலைமை இனிமேலும் எங்களுக்கு இருக்காது என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். மேற்கொண்டு எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. ஆனால், மக்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதையும், எங்களுக்கு இருந்த சட்டபூர்வ மற்றும் அரசியல் அதிகாரங்கள் இனிமேல் கிடைக்காது என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் குராத்.





புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கும் செயல்பாடு அதிக நடைமுறைகளைக் கொண்டதாக இருக்கும் என்று இங்குள்ள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். மாநில மனித உரிமைகள் கமிஷன் உள்பட, குறைந்தது ஒரு டஜன் கமிஷன்கள் கலைக்கப்பட்டு, அவற்றின் அலுவலர்கள் வேறு துறைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.





மாநில தேவைகளுக்காக கடந்த பல தசாப்தங்களில் மாநில அரசு உருவாக்கிய 100க்கும் மேற்பட்ட சட்டங்கள் இப்போது காலாவதியாகிவிட்டன. ஜம்மு காஷ்மீர் இப்போது மத்திய சட்ட நிர்வாகத்தில் வருவதால் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆளுநர் என்ற பதவி, இனி துணை நிலை ஆளுநர் என்று மாறும். மத்திய சட்டங்களை அமல் செய்ய சில துறைகள் உருவாக்கப்படும். சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 89ல் இருந்து 114 ஆக அதிகரிக்கப்படும்.





மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் கருத்து கூற அஞ்சுகின்றனர். அப்படி பேச முன்வருபவர்களும், தங்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.





``மாநில அதிகாரிகளும், அலுவலர்களும் டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் நிர்வாகச் சக்கரத்தின் பற்களைப்போல தான் இருப்பார்கள். சம்பளக் குறைப்பு அல்லது கட்டாய இடமாற்றம் எதுவும் இல்லை. ஆனால் நாங்களும், எங்களுக்கு முன்பு பணியாற்றியவர்களும் உருவாக்கிய நிர்வாக நடைமுறைகள் சீர்குலைக்கப்படும் என்ற உணர்வு உள்ளது'' என்று காஷ்மீரி அதிகாரி ஒருவர் கூறினார்.





மகளிர் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த இந்திய சட்டங்களும், முஸ்லிம் பெண்கள் விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமும், இப்போது தானாகவே ஜம்மு காஷ்மீரிலும் அமலுக்கு வந்துவிடும்.





சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.5000 கோடி மதிப்புக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாநில மக்களின் கலாசாரம் அல்லது அடையாளத்தை இந்த முடிவு எந்த வகையிலும் பாதிக்காது என்று அரசு திரும்பத் திரும்ப உத்தரவாதம் அளித்து வருகிறது. ``வெளி மாநிலத்தவர்கள்'' காஷ்மீருக்கு வந்து ஆதாரவளங்களை சுரண்டத் தொடங்கி விடுவார்கள் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.





``இரண்டு குடும்பங்களின் அநியாய ஆட்சிகளுக்கு'' முடிவு கட்டும் வகையில் புதியவர்களின் தலைமையில் காஷ்மீரில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாக வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார். அப்துல்லா மற்றும் முஃப்தி குடும்பத்தினரை அவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். முன்னாள் முதல்வர்கள் மூன்று பேரும், பல தலைவர்கள் மற்றும் இயக்கவாதிகளும் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் முடங்கியுள்ளது.





ஆனால் பாஜகவின் காஷ்மீர் விவகாரங்களைக் கவனிக்கும், பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், சமீபத்தில் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்ட போது, அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களை அடைப்பதற்கு இந்தியா முழுக்க நிறைய சிறைகள் உள்ளன என்று இந்தத் தலைவர்களுக்கான தகவலாகக் கூறினார். தொடர்ந்து அரசியல் செய்ய விரும்புபவர்கள், மாநில அந்தஸ்து தர வேண்டும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.





``அரசியல் கட்சிகள் மடிந்துவிடுவதில்லை. ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் கடினமான காலக்கட்டங்களை அரசியல் கட்சிகள் கடந்து வரும். எங்கள் செயல் திட்டத்தை டெல்லி முடிவு செய்ய முடியாது. எதிர்காலத்தில் நாங்கள் என்ன மாதிரியான அரசியல் செய்ய வேண்டும் என்பதை உள்ளூர் மக்களும், அவர்களுடைய உயர் விருப்ப லட்சியங்களும்தான் முடிவு செய்யும்'' என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாஹிர் சையத் கூறுகிறார். அவருடைய கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டுள்ளார்.





ஏறத்தாழ இந்திய அரசு ஆதரவு அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டு அல்லது வீட்டுப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் அரசியல் என்பது கடந்த கால விஷயம் என்பது போல மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் அனைத்து 22 மாவட்டங்களிலும் அரசு சமீபத்தில் வளர்ச்சிக் கவுன்சில்களை உருவாக்கியது. இவற்றின் தலைவர்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.





``கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அரசியலுக்கு மாற்றாக வருவார்கள் என்று இந்தியா நினைக்கிறது. இந்த பரிசோதனையை அவர்கள் செய்யட்டும். ஆனால், அவர்கள் தீர்க்க விரும்பும் பிரச்சினை இன்னும் மோசமாகிவிட்டது'' என்கிறார் டாஹிர் சையத்.





கடந்த ஆண்டு பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியில் சேர்ந்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னெயின் மசூதி இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ``மிகப் பெரிய அரசியல் சாசன மோசடி'' என்று அவர் கூறுகிறார்.





இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நவம்பர் 14 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறது.





ஆனால் அரசு அதற்குள் அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இது மறு ஆய்வுக்கு உகந்தது என்று உச்சநீதிமன்றம் கருதி, இதை விசாரிக்க நீதிபதிகள் அமர்வை நியமிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்புகளை அரசு எப்படி கலைத்துவிட்டு துணை நிலை ஆளுநர்களை நியமிக்கும்?''





அடிப்படை மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணம் பற்றி மசூதி கேள்வி எழுப்புகிறார்.





``வளர்ச்சி தடைபட்டது என்று சொல்கிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், வளர்ச்சிக் குறியீட்டில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. இங்கே பிச்சைக்காரர்கள் கிடையாது. நடைபாதைகளில் தூங்கும் மக்கள் கிடையாது. வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை உள்ளது. ஆனால், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் பாராமுகம் தான் காரணம்'' என்று மசூதி கூறுகிறார்.





இந்தியாவின் தேசிய நீரோட்டத்திற்கு காஷ்மீரிகளைக் கொண்டு வருவது தான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பது உண்மையாக இருந்தால், ``அது இடைவெளியை அதிகரித்துவிட்டதாக அஞ்சுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.





யூனியன் பிரதேசமாக மாறுவது பற்றிக் கேட்டதற்கு, ``எல்லாமே இன்னும் முடிந்துவிடவில்லை. நவம்பர் 14 ஆம் தேதி நீதிமன்ற விசாரணை வரை நாம் காத்திருப்போம்'' என்று பதில் அளித்தார்.


Blogger இயக்குவது.