பொது இடத்தில் ஆவேசப்பட்ட சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனைத் தட்டி விட்டார்

மதுரையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் செல்போன் எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்ட காட்சி வலைதளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.



நடிகர் சிவகுமார் திரைப்பட உலகின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர். மூத்த கலைஞர் என்கிற முறையில் அனைவராலும் மதிக்கப்படுபவர். நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை. சினிமா உலகை விட்டு ஒதுங்கிய சிவகுமார் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்.

மேடைப்பேச்சில் கவனம் செலுத்தி வருகிறார். கருணாநிதியின் வசனம், தமிழ் இலக்கியங்கள், புராணங்களை மனப்பாடமாக மேடையில் பேசக்கூடியவர். சமீபத்தில் இவரது பேச்சுகள் அடங்கிய தொகுப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவுக்கு பவுன்சர்கள் புடைசூழ நடிகர் சிவகுமார் வந்தார். ரிப்பன் கட் பண்ணுவதற்கு அவர் அருகில் வரும்போது ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்ஃபி எடுக்கும் ஆவலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரம் சிவகுமார் திடீரென செல்ஃபி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அது பத்தடி தொலைவில் போய் விழுந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த இளைஞர் செய்வதறியாது திகைத்தார்.

சிவகுமார் பெரிய பிரபலம், எதுவும் கேட்க முடியாத நிலையில் பின்னால் இருக்கும் தனது நண்பரிடம் தனது செல்போன் தட்டிவிடப்பட்டதை மவுனமாக சைகையில் காண்பித்தார்.

பிறகு அமைச்சர் உதயகுமாருடன் சிவகுமார் ரிப்பனை வெட்டி கருத்தரிப்பு மையத்தைத் திறந்து வைத்தார்.

நடந்தவற்றை அருகிலிருந்த பெண் ஏற்பாட்டாளர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சமீபகாலமாக நடிகர் சிவகுமார் ஆவேசமாக பொதுவெளியில் செயல்படுகிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சென்னை விழா ஒன்றில் பங்கேற்ற சிவகுமார் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த கேள்விக்கு அதை யாரும் தடுக்க முடியாத காலம் வரும் என ஆணித்தரமாக கருத்தை எடுத்து வைத்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் ஆனால் பெண்களும் இதை எதிர்க்கிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் பதில் அளித்தார்.

உன் அம்மா, அப்பாதான்யா எதிர்ப்பார்கள். உன் சகோதரிகள் எதிர்க்க மாட்டார்கள் என்று ஒருமையில் கூறினார். அதற்கு அந்த செய்தியாளர் ஏதோ கேட்க முயல பேசாதய்யா என்று ஆவேசமாக அவரை நோக்கி சிவகுமார் பேசினார்.மூத்த கலைஞர் என்பதால் அந்த இளம் செய்தியாளரும் அமைதியாக இருந்துவிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இது சங்கடத்தை தரவே அவர்கள் சிரித்து சமாதானப்படுத்தும் வகையில் சிவகுமாரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பொது இடங்களில் ஒரு பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளரை வாயா, போயா என ஒருமையில் சிவகுமார் அழைத்தது அன்றே விமர்சனத்துக்குள்ளானது.

பொது இடங்களில் ஆவேசத்தைக் காட்டும் பிரபலங்கள் நகைப்புக்குரியவர்களாகத்தான் மாறியுள்ளனர் என்பதற்கு இதற்கு முன்னர் பல உதாரணங்கள் உள்ளன. சிவகுமாரின் இதுபோன்ற செயல் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அந்த ரசிகரிடம் ஒரு பத்து வினாடி சிரித்தபடி செல்ஃபி எடுத்து அனுப்பியிருந்தால் உயர்ந்திருப்பார் என வலைதளங்களில் விமர்சனம் செய்யப்படுகிறது.
Blogger இயக்குவது.